

குறியீட்டுப் படம்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கி காயமடைந்த பிளஸ் 2 மாணவர் இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.
பட்டீஸ்வரம் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் 1,000-க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர். இவர்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதியில் டிச.4-ம் தேதி 2 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் மோதிக் கொண்டனர். அப்போது, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேர் சேர்ந்து பிளஸ் 2 மாணவர் ஒருவரின் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மாணவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேரை கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று அடைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த பிளஸ் 2 மாணவர், மூளைச்சாவு அடைந்ததை இன்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த மாணவர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் 5 பேர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளஸ் 2 மாணவரின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரத்தில் போலீஸார் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.