

பெரம்பலூரில் விபத்திற்குள்ளான ஆம்னி பேருந்து
பெரம்பலூர்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் ஆம்னி பேருந்து வந்தபோது, திண்டிவனத்தில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சிமெண்ட் பலகை கற்களை ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சங்கம்புரி பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் பொன்பால்துரை (52), திருவள்ளூர் மாவட்டம் மணலியை சேர்ந்த திருநாவுக்கரசு (34) என்பது தெரியவந்தது.
காயம் அடைந்தவர்கள், திருவாரூர் மாவட்டம் எழுவராயன் பட்டியைச் சேர்ந்த சரவணன் (44), மதுரை திருப்பரங்குன்றம் அர்ஜுன் (31), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அஸ்வத் (31), மதுரை மேலூரை சேர்ந்த ரகுமான் (21), மதுரை சாவடியை சேர்ந்த வெண்ணிலா ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.
விபத்து காரணமாக சென்னை - திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.