

ரவுடி கணேஷ் தாக்கியதில் காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ்குமாரிடம் நலம் விசாரிக்கும் கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார். உள்படம்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கணேஷ்.
சென்னை: கொலை, கொள்ளை என 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ‘தொப்பை’ கணேஷ்,சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புழல் கிழக்கு காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியை சேர்ந்த ஜவுளி அதிபர் விஜயகுமார், அவரது மனைவி, தாய் மற்றும் 2 மகள்களை தாக்கி கட்டிப்போட்டு, ரூ.25 லட்சம் பணம், 30 பவுன் தங்கம், வைர நகைகள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை முகமூடி கும்பல் கடந்த ஜன.30-ம் தேதி கொள்ளையடித்தது.
இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, எண்ணூர் ராகுல் (28), புழல் பிரவீன் குமார் (28), வியாசர்பாடி புகழேந்தி (25), திருத்தணி அபிஷேக் (20), சோழவரம் ஜான்சன் (25) ஆகிய 5 பேரை கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது வியாசர்பாடி பி.வி.குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ‘ஏ’ பிளஸ் ரவுடியான ‘தொப்பை’ கணேஷ் என்ற கணேஷ் (35) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவர் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்றனர்.
இதற்கிடையே, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த கணேஷ், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. திரு.வி.க நகர் காவல் ஆய்வாளர் பூபதிராஜா, எஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ் குமார் ஆகியோர் கொண்ட மற்றொரு தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு அங்கு சென்று, கட்டிடத்தை சுற்றிவளைத்தனர். சரணடையுமாறு அவரை எச்சரித்தனர்.
தப்பிக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த கணேஷ், கத்தியால் போலீஸாரை தாக்கினார். இதையடுத்து, ஆய்வாளர் பூபதிராஜா தற்காப்புக்காக 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 2 குண்டுகள் மார்பில் பாய்ந்த நிலையில், கணேஷ் சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாதவரம் போலீஸார், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி கணேஷ் மற்றும் அவர் தாக்கியதில் காயமடைந்தஎஸ்.ஐ. சுப்பிரமணி, தலைமைக் காவலர் தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரவுடி கணேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 2 போலீஸாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேஷ் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து 3 கத்திகள், 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
23 வயதில் கத்தியை எடுத்தவர்: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ‘தொப்பை’ கணேஷ் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். திருமணம் ஆக வில்லை. பிரபல ரவுடி சேராவின்கூட்டாளியாக வலம் வந்தவர். இவர்களது எதிர் தரப்பைச் சேர்ந்த இடிமுரசு இளங்கோ கடந்த 2013-ம் ஆண்டு எம்கேபி நகரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்தான் கணேஷ் 23 வயதில் முதன்முதலாக சிக்கினார். பின்னர், வியாசர்பாடி பழனி (2016), சோழவரம் கரிமேடு திவாகர் (2018) கொலை வழக்கிலும் சிக்கினார்.
2016-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை, திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். அதில், கிடைத்த நகை, பணத்தை கூட்டாளிகளுடன் பங்கிட்டு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்காக ஒரு கும்பலை தயார் செய்து, பல கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
வீடு புகுந்து கொள்ளையடிக்கும்போது அங்கிருப்பவர்களை கட்டிப்போட்டு, அவர்களை சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவர் மீது 2 கொலை முயற்சி, 2 கூட்டுக் கொள்ளை, 5 கொள்ளை, 13 திருட்டு, 4 ஆயுதச் சட்டங்கள், 2 வெடிபொருள் சட்டங்கள் என மொத்தம் 30 வழக்குகள் உள்ளன. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா, காக்கா தோப்பு பாலாஜி, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானி கொள்ளையன் குலாம் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தொப்பை கணேஷ் என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ரவுடிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.