

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது, 50 அடி உயரத்தி லிருந்து தவறி விழுந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோரே கஞ்சு (23) என்ற இளைஞர் கடந்த 11 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
நேற்று ஆற்காடு சாலையில் உள்ள 185-வது தூணில் சோரே கஞ்சு ஏறி வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறி சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையிலும் உட லிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைக் கண்ட அருகிலிருந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.