

ரேஷன் கடையில் சிக்கிய ஜானகியிடம் விசாரிக்கும் போலீஸார்.
மதுரை: சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஏலச்சீட்டு மற்றும் நகை அடகுக் கடை நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நகை அடகு வைத்துள்ளனர். மேலும், ஏலச்சீட்டும் போட்டுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜீவானந்தம் குடும்பத்துடன், ஏலச்சீட்டு பணம், 300 பவுன் நகையுடன் திடீரென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியாததால் பணம், நகையை இழந்தோர் தவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரும்பாடி கிராமத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3 ஆயிரம் பணத்துடன் வழங்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத்தொகுப்பை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, குடும்பத்துடன் தலைமறைவான, ஜீவானந்தத்தின் தாயார் ஜானகி(75), பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க காரில் ரேஷன் கடைக்கு வந்தார். சீட்டு மற்றும் நகை அடமானம் வைத்து ஏமாந்த மக்கள் ஜானகியைப் பார்த்ததும் அவரைச் சுற்றிவளைத்து பிடித்தனர். போலீஸாருக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் வரவழைத்தனர்.
சோழவந்தான் போலீஸார் நேரில் வந்து ஜானகியை பிடித்து விசாரித்தனர். ஜானகியை எக்காரணம் கொண்டும் விடுவித்துவிடக் கூடாது என போலீஸாரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். ஜீவானந்தம் எங்கே இருக்கிறார், ஏலச்சீட்டு, அடமானம் வைத்த நகைகளை குறித்து கேட்டனர்.
இதுகுறித்து மதுரை எஸ்பி அரவிந்த் கூறும்போது, ‘‘ஜானகியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அவரது மகன் இருப்பிடம் குறித்து தேடி வருகிறோம். 300 பவுன் நகை மோசடி செய்யப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக புகார் மனுக்களை பெற்று வருகிறோம். முடிவில்தான் மோசடி எவ்வளவு நடந்தது என்பது தெரியும். விசாரணை முடிவில் ஜானகி கைது செய்யப்படுவார்’’ என்றார். இச்சம்பவம், மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.