

இடது: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பால் வியாபாரி மகேஷ்.
ஓசூர்: ஓசூரில் வடமாநில பெண் தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவரது கணவர் சொந்த ஊரில் உள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தன்னுடன் தங்கியுள்ள தோழியிடம் பேசுவதற்காக அவ்வழியாக வந்த ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்த பால் வியாபாரி மகேஷ் (37) என்பவரிடம் அப்பெண் செல்போன் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அந்த பெண்ணின் தோழி இருக்கும் பகுதிக்கு தான் செல்வதாக கூறியதோடு, தனது இருசக்கர வாகனத்தில் அங்கே கொண்டு போய் விடுவதாக கூறி அப்பெண்ணை வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அப்பெண்ணை தோழி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் ஜுஜுவாடி பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற மகேஷ், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மகேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.