

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து 9.4 பவுன் நகையை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(40).
இவர் கடந்த ஜன. 27-ம் தேதி மனைவி, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு முத்துநகர் விரைவு ரயிலில் புறப்பட்டார். அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறி தனது பையை கீழே வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பை மாயமாகி இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அதனடிப்படையில் தீவிரமாக தேடி, நகை பையை திருடியவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிரகாஷ்(40) என்பதும், பாலமுருகனின் நகைகளை திருடிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.