

சென்னை: பெண்ணை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் நைட்டி அணிந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார்.
அவரை ஒரு நபர் தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்து, அத்துடன் ஆபாச குரல் பதிவுகளையும் இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அப்பெண் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த பரத்(28) என்ற பி.காம். பட்டதாரி மீது சந்தேகம் எழுந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில், பல பெண்களை ரகசியமாக படம் பிடித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாக பதிவேற்றம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பரத் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.