

சென்னை: கொடுங்கையூரில் இளைஞர் உயிரிழப்புக்கு போதை ஊசி காரணமா? என போலீஸார் விசாரிக்கின்றனர்.
கொடுங்கையூர், முத்தமிழ்நகரை சேர்ந்தவர் கிருபாகரன் (28). பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி, பக்கத்து வீட்டினர் உதவியுடன் கணவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிருபாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக, கிருபாகரன் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பயன்படுத்திய ஊசி, போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதனால், கிருபாகரன் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என்று போலீஸார் கூறினர்.