

கரூர்: கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவருக்கு பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்படும் பிழைப்பூதியம் எனப்படும் அரை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு நேற்று பிரபாகரன் தனது மகனுடன் அமர்ந்து, யாசகம் பெற்றார்.
பிரபாகரன் கூறும்போது, “பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தேன். என் மீது போடப்பட்ட வழக்கால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு பிழைப்பூதியமாக அரை மாத சம்பளமும் இரு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் வேலையும், வருமானமும் இன்றி குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி உள்ளேன். அதற்காக மகனுடன் கோயில் முன் யாசகம் பெற வந்தேன்” என்றார்.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவருக்கு அறிவுரை கூறி, அவரை அங்கிருந்து புறப்பட அறிவுறுத்தினர். அப்போது, பிரபாகரன் போலீஸார் காலில் விழுந்து கதறி அழுதார். அதன்பின் மகனுடன் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘செப்.18-ம் தேதி இரவு பசுபதிபாளையம் பகுதியில் பிரபாகரன், அப்பகுதியை சேர்ந்த காவல் துறைக்கு தொடர்பில்லாத கவுதமனை உடன் அழைத்து கொண்டு ரோந்து சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளதாக அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அக்.8-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையான பிரபாகரன், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அக்.10-ம் தேதி முதல் அக்.25-ம் தேதி வரை கையொப்பமிட்டு வந்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.