

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தவர் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024 செப்.29-ல் சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த முகமது மானிக் உசேன், சுலைமான் மற்றும் முகமது ரகுமான் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கி பணியாற்றிவந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பு அளித்தார். இதில் சுலைமானுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், முகமது மானிக் உசேன், முகமது ரகுமான் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பூமதி ஆஜராகினார்.