

பூவரசி, அக் ஷய்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட காதல் விவகாரத்தில், தாய், மகளை கொலை செய்ததாக காதலனை போலீஸார் கைது செய்தனர்.
பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி (45), பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களது மகள் பூவரசி (25), படிப்பை முடித்துவிட்டு பல்லடத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அக் ஷய் என்பவருக்கும், பூவரசிக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு பூவரசியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அக் ஷய்யுடன் பேசுவதை பூவரசி தவிர்த்தார்.
இந்நிலையில், பூவரசியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு அக் ஷய் நேற்று வந்துள்ளார். அங்கு பூவரசி மற்றும் தனலட்சுமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அக் ஷய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பூவரசி, தனலட்சுமி ஆகியோரை வெட்டியுள்ளார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அக் ஷையை பிடித்து கட்டிவைத்துவிட்டு பல்லடம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நிகழ்ந்த இடத்தை எஸ்பி சிருஷ்டி சிங் பார்வையிட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.