

சென்னை: முந்திச் செல்வதில் ஏற்பட்ட மோதலில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் மாதவன் (26).
இவர், நேற்று மதியம் தடம் எண் 28பி அரசு பேருந்தை எழும்பூரில் இருந்து எண்ணூர் நோக்கி இயக்கிச் சென்றார். பேருந்து சிந்தாதிரிப்பேட்டை ஏ-1 பார்சல் அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பைக் ஒன்று முந்திச் செல்ல முயன்றது.
பேருந்து ஓட்டுநர் வழிவிடாமல் சென்றுள்ளார். சில மீட்டர் தூரத்தில் பேருந்தை பைக் முந்திச் சென்றது. அப்போது, பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும், பேருந்தை நிறுத்தி "எதற்காக ஹாரன் அடித்தாய்?" என்று கேட்டு
தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஓட்டுநர் மாதவனை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற நடத்துநர் சத்யாவையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தாக்குதல் விவகாரம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மாதவன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, சேப்பாக்கம் லாசல் தெருவை சேர்ந்த லிங்கன் (43), சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார் (52) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.