

அருணகிரி, சுப்பிரமணி, முத்து, செங்குட்டுவன், பிரபு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களிடம் தனிநபர் நில உரிமை பெற்று தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் பெற்ற புகாரில் வனச்சரக அலுவலர்கள் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் தனிநபர் நில உரிமை கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழங்குடியினர் நல துறையில் விண்ணப்பித்துள்ளனர். வனத்துறைக்குச் சொந்தமான பகுதியில் இருந்து பழங்குடியினர்களுக்கு வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டத்தின்கீழ் தனிநபர் நில உரிமை வழங்கப்படுகிறது.
இந்த உரிமை மூலம் வன பகுதியில் வசித்து வரும் ஒரு பழங்குடியின தனிநபர் அல்லது அவரது குடும்பம், தங்களின் வாழ்வாதாரத்துக்காக பயிரிட்டு வரும் விவசாய நிலம் மற்றும் அவர்கள் குடியிருக்கும் வீட்டுமனை ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியும்.
இந்த தனிநபர் நில உரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பழங்குடியினர் 2025 டிச.13 அன்றோ அல்லது அதற்கு முன்போ அந்த வன நிலத்தை பயன்படுத்தி, விவசாயமோ அல்லது குடியிருப்பதாகவோ இருக்க வேண்டும். இந்த நில உரிமை பெறுபவர்கள் அவர்களது பிள்ளைகள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, தானமாக வழங்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது. இத்தகைய தனி நபர் நில உரிமையை பெறுவதற்கு 3 அடுக்கு குழுக்கள் மூலம் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் தனிநபர் நில உரிமை கோரி பழங்குடியினர் நலத் துறை மூலமாக விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, களஆய்வு செய்யக்கோரி மாவட்ட வன துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பங்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த களஆய்வு பழங்குடியின நலத்துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு, ஒவ்வொரு கிராம சபையிலும் வருவாய் மற்றும் வனத்துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் பங்களிப்புடன் கள ஆய்வு மற்றும் நில அளவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களிடம் தனிநபர் நில உரிமை பெற்று தருவதாகக் கூறி பணம் கேட்டு வன துறையினர் சிலர் மிரட்டியதாக சென்னையில் உள்ள வனத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து வனத்துறையில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பழங்குடியின மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரிடம் நில உரிமை பெற்று தருவதாகக் கூறி 6 வனத்துறை ஊழியர்கள் பல லட்சம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பணம் பெற்ற புகாரில் சிக்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வனவராக பணியாற்றி வரும் சுப்பிரமணி, அருணகிரி, வனக்காப்பாளர் முத்து, வனச்சரக அலுவலர் செங்குட்டுவன் ஆகிய 4 பேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து தற்போது அயல்பணியாக சென்னையில் பணிபுரிந்து வரும் வனச்சரக அலுவலர்கள் பிரபு, சுரேஷ் உள்பட 6 பேரை திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்னரே பொதுமக்களிடம் பெறப்பட்ட பணம் எவ்வளவு என்பது தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.