

திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பஞ்சக்கரையில் யாத்ரி நிவாஸ் என்ற பயணிகள் தங்கும் விடுதி உள்ளது.
இங்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தில்லைஸ்தானம் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் மற்றும் பூமாலை கட்டும் தொழிலாளி சுவாமிநாதன்(67), அவரது மனைவி செண்பகவள்ளி(65), மகள்கள் பவானி(42), ஜீவா(37) ஆகியோர் கடந்த 10-ம் தேதி ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இவர்களில் செண்பகவள்ளி, பவானி, ஜீவா ஆகியோர் மனவளர்ச்சி குன்றியவர்கள். பவானிக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் விவாகரத்தாகிவிட்டது. ஜீவாவுக்கு சில ஆண்டுகளாக பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறை 4 நாட்களாக திறக்கப்படவில்லை. மேலும், அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், சந்தேகமடைந்த யாத்ரி நிவாஸ் ஊழியர்கள், ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நால்வரின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. அவற்றை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த அறையில் போலீஸார் நடத்திய சோதனையில் சுவாமிநாதன் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், “மூத்த மகளுக்கு திருமணமாகி, விவாகரத்து ஆகிவிட்டது. இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை. எங்களுக்கு வயதாகிவிட்டதால், எங்களுக்கு பின்னால் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை.
எனவே, விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “4 பேரும் கடந்த 14-ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அனைவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.