

சென்னை: மணலி, சின்னசேக்காடு, அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரோகன் (27). துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார்.
இந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு உள்ளே செல்வதற்கு முன்பு, அவர்களது செல்போனை, வெளியில் உள்ள அலமாரியில் வைத்துவிட்டு, பின்னர் வேலை முடித்து செல்லும்போது எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் ரோகன் கடந்த 19-ம் தேதி மாலை, அவரது செல்போனை வழக்கம்போல அலமாரியில் வைத்துவிட்டு, பின்பு இரவு பார்த்தபோது, அவரது ஐ-போனும் சக ஊழியர்களின் பல செல்போன்களும் திருடுபோயிருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஐடி ஊழியர்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விஜய்குமார் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜய்குமார் மற்றொரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், இவர் ஏற்கெனவே தற்போது செல்போன் திருடுபோன ஐடி நிறுவனத்தில் வேலை செய்தபோது ஊழியர்கள் அலமாரியில் செல்போன்களை வைத்து விட்டு செல்வதை தெரிந்து கொண்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.