

சிவகங்கை: சிவகங்கையில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கிளுவச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி. முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2.15 கோடி மதிப்பிலான 3 சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்தார். பணி முடிந்த நிலையில், ரூ.18.47 லட்சம் விடுவிக்கப்படாமல் இருந்தது.
இதற்காக, அவர் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சையது இப்ராஹிமை அணுகினார். அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல்படி, லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது. இதை பெற்றபோது சையது இப்ராஹிமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.