

பிரபாகரன்
சென்னை: திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் பிரபாகரன். இவரது நண்பர் தியாகு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக பிரமுகராக உள்ளார்.
இருவரும் கடந்த மாதம் 25-ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளனர். பயணத்தின்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயதுடைய பணிப்பெண்ணின் ஊர் பெயரை கேட்டு தொடர்ந்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி அந்த பெண்ணைத் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
அந்த பெண், விமானம் டெல்லி சென்றடைந்ததும் தனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பிரபாகரன் மற்றும் தியாகுவிடம் போலீஸார் விசாரித்தனர். மேலும், அடுத்தகட்ட விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து, அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை பிரபாகரனும், தியாகுவும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். இதை அறிந்த போலீஸார், விமான நிலையம் சென்று இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.