

கொல்லப்பட்ட சோமசுந்தரம், முத்துலட்சுமி, சுப்ரியா
பெங்களூரு: பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண் புதுசேரியில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகவுள்ள காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது மனைவி முத்து லட்சுமி (48), மகள்கள் சுவேதா (24), சுப்ரியா (20) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் சுவேதா தன்னுடன் கல்லூரியில் படித்த கென்னத் (26) என்பவரை காதலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம், வீட்டில் இருந்து வெளியேறிய அவர், கென்னத் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துள்ளார். மேலும் தனது வேலையில் இருந்து விலகி, பெற்றோரின் பெயரில் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்த தனியார் வங்கி சோமசுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் கோபமடைந்த சோமசுந்தரம், கடன் விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது மனைவி முத்துலட்சுமி, இளைய மகள் சுப்ரியா ஆகியோருடன் கடந்த 22-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மூத்த மகள் சுவேதாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறிய நிலையில், சுவேதா தனது தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகிய இருவரையும் கூர்மையான கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கென்னத்தின் உதவியால் இருவரின் உடலையும் அங்கிருந்த வேறு அறைக்கு மாற்றியுள்ளார். பின்னர் மனைவி மற்றும் இளய மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த தந்தை சோமசுந்தரத்தை சுவேதாவும், கென்னத்தும் இணைந்து கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறி, தப்பிக்க முயற்சிக்கும் போது படிக்கட்டில் சரிந்து விழுந்துள்ளார். மூவரும் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அங்கேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சுவேதா பேருந்து மூலமாகவும் காதலன் கென்னத் இருசக்கர வாகனம் மூலமாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலர், 3 பேரின் உடல்களையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த கே.ஆர்.புரம் போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய சுவேதா, அவரின் காதலன் கென்னத் ஆகிய 2 பேரையும் பிடிக்க 6 தனிப்படைகளை அமைக்கப்பட்டன.
புதுச்சேரியில் கைது: இதனிடையே, குடும்பத்தினரை கொன்றுவிட்டு பெங்களூருவில் இருந்து தப்பிச் சென்ற சுவேதாவின் செல்போன் செயல்பாடுகளை ஆராய்ந்ததில், அவர் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக புதுச்சேரிக்கு தொடர்புகொண்ட பெங்களூரு போலீஸார் புதுவை ரயில் நிலையத்தில் இருந்த சுவேதாவை கைது செய்தனர்.
விசாரணையில், ”எனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என் தனிப்பட்ட விருப்பங்களை செய்ய விடாமல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினர். என் ஆண் நண்பருடன் ஒன்றாக இருக்கக்கூடாது என கண்டித்தனர். அதன் காரணமாகவே மூவரையும் கொலை செய்தேன்” என சுவேதா ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாகவுள்ள காதலன் கென்னத்தை தனிப்படை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் இரு சக்கர வாகனம் மூலம் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.