

கிருஷ்ணகுமார், பாக்கியா
சென்னை: திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த துக்கத்தில் மகளும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில், 1-வது தெருவில் வசித்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வசிக்கிறார். 2-வது மகள் பாக்கியா (30).
திருமணம் ஆகாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இளைய மகள் பாக்கியாவுக்கு 30 வயதாகியும் திருமணம் ஆகாததால் தந்தை கிருஷ்ணகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மனைவியும், மகளும் அவரை தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் கிருஷ்ணகுமாரின் மனைவி, வீட்டுக்கு பின்புறம் பாழடைந்த கிணற்றின் மீது கிருஷ்ணகுமாரின் செல்போன் இருப்பதைக் கண்டு தன் மகளிடம் தெரிவித்துள்ளார்.
உடனே மகள் பாக்கியா ஓடிவந்து பார்த்தபோது கிணற்றில் தந்தை உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அம்மாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு சமையலறைக்குச் சென்று தூக்கில் தொங்கினார்.
இதை சற்றும் எதிர்பாராத பாக்கியாவின் தாய், உடனே தனது மூத்த மகள் பிருந்தாவுக்கு போன் செய்து நடந்தவற்றைத் தெரிவித்தார். இதையடுத்து, அவர் தனது கணவருடன் தாய் வீட்டுக்கு விரைந்தார்.
அறையில் பூட்டி வைக்கப்பட்ட தாயை மீட்டதோடு, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பாக்கியாவையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் பாக்கியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
கிணற்றில் மிதந்த கிருஷ்ண குமார் உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வடபழனி போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மகளுக்கு 30 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துவைக்க முடியாததால் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், தந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.