

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ரூ.6.67 லட்சம் கையாடல் செய்ததாக பள்ளி காசாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர் அருகே தண்டலத்தில் ஜே.எஸ்.குளோபல் வித்யாமந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதம் தணிக்கை நடைபெற்றது.
அப்போது பள்ளியில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத் தொகைக்கும், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையே வேறுபாடு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ.6 லட்சத்து 67 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளி முதல்வர் அர்ச்சனா, திருப்போரூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பள்ளியில் காசாளராகப் பணியாற்றி வந்த தையூரைச் சேர்ந்த சேகர் மகன் மனோஜ்குமார் (32) என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணப் பணத்தில் ரூ.6.67 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளியின் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.