

காரைக்குடி: குடும்ப வறுமையை பயன்படுத்தி 45 நாட்களே ஆன குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு வாங்கிச் சென்ற 3 பெண்கள் குறித்து தாயார் அளித்த புகாரின்பேரில் காரைக்குடி போலீஸார் விசாரித்து உடனடியாக குழந்தையை மீீட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தநிலையில், லெட்சுமி மீண்டும் கர்ப்பமானார். கடந்த மே 21-ம் தேதி காரைக்குடி அரசு மருத்துவமனையில் லெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதேசமயத்தில், அந்த மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், வறுமையில் இருக்கும் உங்களால் 4 பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாது. அதனால், ஒரு குழந்தையை விற்று விடலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், லட்சுமி அதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், கடந்த வாரம் லெட்சுமி வீட்டுக்கு சென்னையைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்கள் பணம் தருவதாக குழந்தையைக் கேட்டனர். ஆனால், லெட்சுமி மறுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு லெட்சுமியும், அவரது மூத்த மகளும் வீட்டில் இருந்தபோது சென்னை தம்பதி அனுப்பியதாக கூறி, 3 பெண்கள் அங்கு வந்தனர். பின்னர், ரூ.3 லட்சம் கொடுத்துவிட்டு லெட்சுமியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்றனர். ஆனால், லெட்சுமிக்கு இதை ஏற்க மனமில்லாததால், டிஎஸ்பி ஆஷிஷ்புனியாவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து குழந்தையை வாங்கிச் சென்ற 3 பெண்கள் குறித்து காரைக்குடி தெற்கு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
குழந்தை மீட்பு: இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்புனியா தெரிவித்ததாவது: புகார் வந்ததும் குழந்தையை மீட்டு விட்டோம். மேலும், தாயாரே குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு பேசி விற்றுள்ளார். ஆனால், 3 லட்சம் கொடுத்துவிட்டு மீதியைத் தராததால் புகார் கொடுத்துள்ளார். குழந்தையை தத்துக்கொடுப்பதில் சட்டவிதியை கடைப்பிடிக்காததால் இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.