

சென்னை: கார் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடபழனி நெற்குன்றம் பாதையில் கடந்த 14-ம் தேதி ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் அந்த ஆட்டோ மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சாலிகிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
சிசிடிவி கேமரா காட்சிகள்
முதல்கட்டமாக சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை ஓட்டியது சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் (29) என்பதும், நண்பர்களை உற்சாகப்படுத்த சாலையில் அபாயகரமான முறையில் காரை ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாகவும், விபத்தில் சிக்கியவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதைக் கண்டு பயந்து அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். காவல் ஆணையர் எச்சரிக்கை மது அருந்திவிட்டு அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட நிஷாந்த் மீது கொலைக்கு நிகரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.