

நடிகை த்ரிஷா
சென்னை: நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் நாடு முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது. மேலும் தொழிலதிபர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களுக்கும் மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கூட நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், டிஜிபி அலுவலக முகவரிக்கு இன்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில் நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து டிஜிபி அலுவலக போலீஸார் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் இன்று காலை 9.30 மணியளவில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
பல மணி நேர சோதனைக்குப் பிறகும் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து புரளியைக் கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.