

அரி
பொன்னேரி: கடன் தவணையை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலைவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் அரி (35). கார் ஓட்டுநரான இவர், பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். அரிக்கு சுபலட்சுமி என்ற மனைவியும், 2 வயது மற்றும் 1 வயதில் என, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சுபலட்சுமி தன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அரி நேற்று முன் தினம் மாலை வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் மற்றும் சுபலட்சுமிக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, அரியின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அஞ்சலிக்காக அரியின் உடலை வீட்டு வளாகத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், அரியின் உறவினர்கள், அவரது கையில் அலைபேசி எண் ஒன்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர்.
ஆகவே, அவர்கள் அரியின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகன கடன் தவணை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் அரியை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இதையடுத்து, அரியின் உறவினர்கள், ‘அரி, தனியார் வங்கி கடன் மூலம் தன் மனைவிக்கு இரு சக்கர வாகனத்தை வாங்கிய நிலையில், கடன் தவணையை சில மாதங்களாக செலுத்தவில்லை. ஆகவே, தனியார் வங்கி ஊழியர்கள் அரியை மிரட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, தனியார் வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நேற்று காலை பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, அரியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.