

கோப்புப் படம்
சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர். சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 100 அடி சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு குமார் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் பைக்கில் கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த ஒரு பைக் குமாரின் வாகனத்தை லேசாக உரசியபடி சென்றது. இதில் நிலைதடுமாறிய குமாரின் பைக் சாலையில் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கோ அவரது மனைவி மற்றும் குழந்தைக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை.
எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குமாருக்கு, அங்கு திரண்ட மக்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோயம்பேடு போக்குவரத்து போலீஸாரும், சூளைமேடு ரோந்து போலீஸாரும் இணைந்து நள்ளிரவு சம்பந்தப்பட்ட வாகனங்களை பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக வந்த 5 பைக்குகளை போலீஸார் அடுத்தடுத்து மடக்கிப் பிடித்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பைக் ரேசில் ஈடுபட்ட 10 இளைஞர்களை போலீஸார் பிடித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய 5 விலை உயர்ந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அனைவரையும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் காவல் நிலையம் வரவழைத்து பெற்றோர் முன்னிலையில் இளைஞர்களை போலீஸார் எச்சரித்தனர். பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கினர்.