

உள்படம்: ராஜுபிஸ்வகர்மா
திருவள்ளூர்: தமிழகத்தை உலுக்கிய, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அசாம் இளைஞர் ராஜுபிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1.45 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் ஆரம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூலை 12-ம் தேதி பள்ளி முடிந்து தன் பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த இளைஞர், சிறுமியை மாந்தோப்புக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடினார்.
இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமியை வடமாநில இளைஞர் ஒருவர் பின் தொடர்வது தெரியவந்தது.
அந்த இளைஞரை கண்டு பிடிக்க முடியாமல் தொடக்கத்தில் போலீஸார் திணறினர். அதே நேரத்தில், குற்றவாளியை கைது செய்யக் கோரி, பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லாவின் மேற்பார்வையில் 20 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் சிறப்புக் குழுக்கள், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்ததோடு, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என, அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்தார்.
இச்சூழலில், சிறப்புக் குழுக்களின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் தாபா ஒன்றில் பணிபுரிந்துவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காலே பிஸ்வகர்மா என்கிற ராஜுபிஸ்வகர்மா (35) என்ற இளைஞரை ஜூலை 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் விஜயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கு விசாரணை முடிவில், ராஜுபிஸ்வகர்மா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி நேற்று அளித்தார். அதில், ராஜுபிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1.45 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.தமிழகத்தை உலுக்கிய இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற 5 மாதங்களில், நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.