

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லலில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் உட்பட 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இதில் நாச்சியப்பன் மீது வழக்குப் பதியாமல் இருக்க, சிலர் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.50 லட்சம் வரை வாங்கினர். மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் 2022 ஜன.25-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே சிறுமியின் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டுமென உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிறுமியின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
அதேசமயம், தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பன் மனைவி சகுந்தலாதேவியும் தனது கணவரிடம் இருந்து பணத்தைப் பறித்து தற்கொலைக்குத் தூண்டியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இரு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சுரேஷ் பீட்டர் பெலிக்ஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சகுந்தலாதேவி புகாரில் கூறியபடி நாச்சியப்பனை மிரட்டி பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, மிரட்டி பணம் பெற்ற வழக்கில் கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் குணாளன்(45), தேவகோட்டையைச் சேர்ந்த பாலாஜி (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.