

சென்னை: சென்னை செம்பியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் நிலப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க செம்பியம் காவல்நிலையம் சென்றார். அப்போது, பணியிலிருந்த முதல்நிலை காவலர் வினோத் குமார் (32) புகார் குறித்து விசாரித்து அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் பெற்றுள்ளார்.
அதன்பிறகு வினோத்குமார் தவறான நோக்கத்துடன் குறுந்தகவல்களை அனுப்பி அப்பெண்ணின் வீடு தேடியும் சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வினோத் குமாரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.