

திருப்பூர்: காங்கயம் அருகே அதிகாலையில் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் அழபிச்சா கவுண்டன்புதூர் அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30 பேர் பயணித்தனர். பேருந்தை சுரேஷ் (41) என்பவர் ஓட்டியுள்ளார். இதேபோல, கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
இதில் 25-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்த பேருந்தை விஜயகுமார் (44) ஓட்டியுள்ளார். காங்கயம் அருகே கோவை சாலையிலுள்ள அழபிச்சா கவுண்டன்புதூர் பிரிவு பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட நின்ற பல்லடம் நோக்கி சென்றபேருந்தின் பின்புறம், கும்பகோணத்தில் இருந்து வந்தபேருந்து மோதி விபத்துக் குள்ளானது.
இதில் 2 பேருந்துகளும் சேதமடைந்தன. 2 பேருந்துகள் மோதிக்கொண்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் திரண்டனர். இது குறித்து தகவலறிந்த காங்கயம் போலீஸார், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். விபத்தில் 5 பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காங்கயம் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.