Published : 28 May 2023 04:03 AM
Last Updated : 28 May 2023 04:03 AM

கோவை மாநகர காவல் துறையில் ஆக்டோபஸ் பிரத்யேக மென்பொருள் அறிமுகம்

கோவை மாநகர காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டோபஸ் பிரத்யேக மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட டிஜிபி சி.சைலேந்திரபாபு. அருகில், காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

கோவை: கோவை மாநகர காவல்துறையில், காவலர்களின் பயன்பாட்டுக்காக ‘ஆக்டோபஸ்’ என்ற பெயரிலான பிரத்யேக மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இலச்சினையை டிஜிபி சி.சைலேந்திரபாபு வெளியிட்டார்.

கோவை மாநகர காவல்துறை யில் நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளின் சார்பில், மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்து தங்களது உயரதிகாரிகள் மூலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ், எஸ்.ஐ.சி ஆகிய உளவுப் பிரிவுகளின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயரதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யும் வகையில் பிரத்யேக மென் பொருளை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகர காவல் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, தனியார் நிறுவனத்தினர் மூலம் ஆக்டோபஸ் என்ற பெயரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டது.

இந்த மென்பொருளின் இலச்சினையை டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று முன்தினம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்வில் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம், சுகாஷினி, மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘உளவுத்துறையின் காவலர்கள் சேகரிக்கும் தகவல்களை ஒன்றிணைத்து, பகுப் பாய்ந்து, சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய, பொது அமைதியை பாதிக்கக்கூடிய எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆக்டோபஸ் என்ற புதிய மென்பொருள், கோவை மாநகரில் குற்றவாளிகளை கண்காணிக்கவும், அவர்களை உடனடியாக அடையாளம் காணவும், குற்றங்களில் தொடர்புடையவர்களை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் உதவும். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடக்கும் போது, உளவுத்துறையினர் ஒருங்கிணைந்து, உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பு வதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப்படும்.

உளவுத்துறை காவலர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், மேம்படுத்துவதற்கும், ஆக்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. வழக்கு தொடர்பாக எப்போது வேண்டுமானாலும், காவல்துறையினர் தகவல்களை இதிலிருந்து சேகரித்துக் கொள்ளலாம். இந்த மென்பொருள் ஒரு முன்னோடித் திட்டமாக கோவை மாநகர காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x