

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மூத்த வங்கி அதிகாரி ஒருவரின் மகன் ஹனுமன் மீனா (31). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை அலுவலகம் சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மறுநாள் ஹனுமன் மீனாவின் தந்தைக்கு ஒரு வீடியோ தகவல் வந்தது. அதில் ஹனுமன் மீனா தங்கள் பிடியில் இருப்பதாகவும் ரூ.1 கோடி தராவிட்டால் அவர் கொல்லப்படுவார் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து துரித விசாரணை மேற்கொண்ட ஜெய்ப்பூர் போலீஸார், ஹனுமன் மீனாவை கடத்திய திவாகர் டாங்க் (34), பிரிஜ்பன் சிங் சவுகான் (27), அவரது சகோதரர் யோகேந்திர சிங் சவுகான் (25) ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஹனுமன் மீனாவின் உடலை ஆற்றிலிருந்து மீட்டனர்.
ஹனுமன் மீனாவை கடத்திச் சென்ற மூவரும் அவரது நண்பர்கள். ஒரு மாதம் முன்பே கடத்தலை திட்டமிட்டு, சங்கனேரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். பணம் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிந்து கடத்திய அன்றே ஹனுமன் மீனாவை கொன்றுள்ளனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளி திவாக் டாங்க் ஒரு வழக்கறிஞர். இவர், மீனா தேடப்படும்போது அவரது வீட்டுக்கே சென்று தனது கவலையை தெரிவித்துள்ளார். மேலும் சங்கனேர் காவல் நிலையத்துக்கும் சென்று தனது நண்பனை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டு நாடக மாடியுள்ளார். என்றாலும் சதிச்செயலில் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உள்ள தொடர்பை தொழில்நுட்ப ஆதாரங்கள் வெளிப்படுத்திவிட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.