துன்புறுத்திய கணவரை கொன்ற மனைவி சூரமங்கலம் போலீஸில் சரண்

துன்புறுத்திய கணவரை கொன்ற மனைவி சூரமங்கலம் போலீஸில் சரண்
Updated on
1 min read

சேலம்: சேலத்தில், கணவரை கொன்றதாக கூறி சரணடைந்த மனைவியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலம் ஜாகிர்ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (31), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு மணிமேகலை (28) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், ரமேஷை, கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டதாகக் கூறி, அவரது மனைவி மணிமேகலை சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மணிமேகலை நடத்தையின் மீது ரமேஷூக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. மேலும், தினமும் மது அருந்திவிட்டு, மணிமேகலையை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் ரமேஷ் அடித்து துன்புறுத்தியதால், அவர் மீது மணிமேகலை குழவிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார், என்றனர்.

பள்ளப்பட்டியில் கொலை: சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டையைச் சேர்ந்தவர் உதயசங்கர் (30). வெள்ளித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பாஜகவில் பகுதி செயலாளராக இருந்த இவர், அண்மையில் ஐஜேகே கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், உதயசங்கர், தனது நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வந்தார். அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், உதயசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது.

அதைத் தடுக்க வந்த அலெக்ஸ் பாண்டியனையும் அந்த கும்பல் தாக்கியது. கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த உதயசங்கரும், அவரது நண்பரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், உதயசங்கர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பள்ளப்பட்டி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலை குறித்து மாநகர துணை காவல் ஆணையர் கவுதம் கோயல் மற்றும் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in