Published : 15 May 2023 06:50 AM
Last Updated : 15 May 2023 06:50 AM

சென்னை | கணவரின் உடல்நல குறைவால் விரக்தி: மகளை கொலை செய்துவிட்டு ஆந்திர பெண் தற்கொலை

சென்னை: சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் விரக்தியடைந்த மனைவி மகளை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

மூளையில் ரத்தக் கசிவு: ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (42). மளிகைக் கடை நடத்தி வருகிறார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதியிலிருந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்து வருகிறார். சொந்த ஊருக்குச் சென்றிருந்த ஹரி கிருஷ்ணனின் மனைவி வெங்கட சுமலதா (34), மகள் கன்னியா (12) ஆகியோர் நேற்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர்.

அறையின் கதவு நீண்ட நேரம் பூட்டியிருந்ததாலும், தட்டியும் திறக்காததாலும் பிரசாத் மற்றும் வார்டு பாய் வெங்கடேஷ் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மகள்கன்னியா கழுத்தில் துப்பட்டா துணி இறுக்கமாகச் சுற்றி இருந்தது. வெங்கட சுமலதா மின்விசிறியில் துப்பட்டா துணியால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகர் போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ஹரி கிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், விரக்தியடைந்து மகளைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு வெங்கட சுமலதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x