காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக பெண் எஸ்.ஐ. கைது

பரமேஸ்வரி
பரமேஸ்வரி
Updated on
1 min read

திருவண்ணாமலை: காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல். இவரது மனைவி பரிமளா. இத் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பூந்தமல்லியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு பரிமளா சென்றுள்ளார். மேலும் அவர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெற்றிவேலை அழைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி கடந்த 11-ம் தேதி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் கடந்த 12-ம் தேதி, வெற்றிவேல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர்களது அறிவுரையின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரிடம் லஞ்ச பணம் ரூ.3 ஆயிரத்தை வெற்றிவேல் நேற்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர், காவல் நிலையத்திலேயே பரமேஸ்வரியை கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பரமேஸ்வரியை கைது செய்தனர். ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in