

விழுப்புரம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த மகாலட்சுமி(25), மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பூண்டியான் மகன் மணிகண்டன் என்பவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகினர்.
இந்நிலையில் 2022-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். 25 நாட்களுக்குப் பிறகு மகாலட்சுமி சொத்து சம்பந்தமான பிரச்சினையை கூறி தன் சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. மணிகண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது விரைவில் வந்து விடுவதாக கூறினார். இருப்பினும் அவர் வராததால் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு வளத்தி போலீஸில் புகார் கொடுத்தார். அதில், மகாலட்சுமி செல்லும்போது 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அதில், மகாலட்சுமி முதலில் வேலூரில் ஒருவரை இதே பாணியில் திருமணம் செய்ததும், அதன்பின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து திருமணம் செய்ததும், 5-வதாக மணிகண்டனை திருமணம் செய்து நகை, பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.
பின்னர் கோயமுத்தூர் விமான நிலையம் அருகே சொந்தமாக கார் வைத்து வேலை செய்து வரும் சேலம் ஆத்தூர் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தது தெரியவந்தது. போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர்.