

சென்னை: ஐபிஎல் டிக்கெட் தருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் பண மோசடிசெய்ததாக போலீஸில் இளைஞர் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி, டி.பி.கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (32). ராயப்பேட்டையில் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர், அண்மையில் நடைபெற்று முடிந்த சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண டிக்கெட் எடுக்கமுயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில், ‘ஐபிஎல் டிக்கெட் 2023’ என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து அணுகியுள்ளார். வினோத் யாதவ் என்பவரிடம் 20டிக்கெட்கள் வேண்டும் என கூறி ரூ.90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். பணத்தை அனுப்பியும் அவர் டிக்கெட்களை தரவில்லை. இதையடுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வினோத் யாதவ் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.