வேலூர் | விபத்தை ஏற்படுத்தி உதவுவதுபோல் நடித்து டாஸ்மாக் வசூல் பணம் ரூ.2.50 லட்சத்துடன் தப்பியோடிய மர்ம நபர்கள்

வேலூர் | விபத்தை ஏற்படுத்தி உதவுவதுபோல் நடித்து டாஸ்மாக் வசூல் பணம் ரூ.2.50 லட்சத்துடன் தப்பியோடிய மர்ம நபர்கள்
Updated on
1 min read

வேலூர்: திருவலம் அருகே விபத்தை ஏற்படுத்தி உதவுவதுபோல் நடித்து டாஸ்மாக் கடை மேற்பார்வை யாளரின் வாகனத்தில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத்துடன் தப்பிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் 4 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், திருவலம் அடுத்த இ.பி கூட்டுச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த நிலையில் அன்றைய வசூல் பணம் சுமார் ரூ.2.50 லட்சம் பணத்தை தனது இரு சக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் பாதுகாப் பாக வைத்துக்கொண்டு புறப் பட்டார். காட்பாடி நோக்கி வீட்டுக்கு செல்லும் போது அவரது வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த 3 பேர் அடங்கிய மர்ம நபர்கள், அசோக்குமாரின் வாகனத்தின் மீது லேசாக உரசியுள்ளனர்.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்தவரை காப்பாற்றுவது போல் மர்ம நபர்களில் ஒருவர் நடித்துள்ளார். பின்னர், அவரது இரு சக்கர வாகனத்தை தூக்கி நிறுத்துவதுபோல் பாவ்லா காட்டிய நபர் ஒருவர் திடீரென அந்த வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்றார். அவருடன், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பினர். வாகனத்துடன் டாஸ்மாக் வசூல் பணத்தை இழந்த அசோக்குமார் அதிர்ச்சியில் திருவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில், அவர்கள் முத்தரசிகுப்பம் வரை சென்றதும் அங்கு அசோக்குமாரின் வாகனத்தை சாலையோரம் அனாதையாக நிறுத்திவிட்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் தனிப்படை, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமை யிலான மற்றொரு தனிப்படை என மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பணத்துடன் தப்பியவர்கள் ஆந்திர மாநிலம் சென்றுள்ளனரா? அல்லது காவல் துறையினரை திசை திருப்ப வாகனத்தை அங்கே விட்டுச் சென்றார்களா? என விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in