சென்னையில் வேலை பார்த்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது: 207 சவரன் நகை பறிமுதல்

குமரன் நகர் காவல்துறையினரால் மீட்கப்பட்ட 207 சவரன் நகைகள்
குமரன் நகர் காவல்துறையினரால் மீட்கப்பட்ட 207 சவரன் நகைகள்
Updated on
1 min read

சென்னை: சென்னை குமரன் நகர் பகுதியில் வேலை பார்த்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 207 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.34 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை, அசோக் நகர், 62வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வரும் மதுரகவி என்பவர் கடந்த மே 6-ம் தேதியன்று தனது வீட்டிலிருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50,000 திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து மதுரகவி, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி புகார்தாரரின் மனைவிக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் தேவி என்பவர் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி அவரது நண்பரான ஜெகநாதன் என்பவரிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

திருட்டு வழக்கில் கைதான தேவி மற்றும் ஜெகநாதன்
திருட்டு வழக்கில் கைதான தேவி மற்றும் ஜெகநாதன்

அதன்பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவி (32), மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆண் நண்பர் ஜெகநாதன் (34), ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் வீட்டில் திருடப்பட்ட 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.34,000 பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட தேவி மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரும் விசாரணைக்குப்பின்னர் செவ்வாய்க்கிழமை (மே 9) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in