24 பேரின் இன்ஸ்டா கணக்குகளை முடக்க பரிந்துரை: கோவை சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை

24 பேரின் இன்ஸ்டா கணக்குகளை முடக்க பரிந்துரை: கோவை சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

கோவை: குற்றச் செயல்களை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக் களை பதிவு செய்ததால், 24 பேரின் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனத்துக்கு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்களை தூண்டும் வகையில் சிலர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் கணக்குகளை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளம் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சட்ட விதிமுறைகள் நாடுகளுக்கு இடையே வேறுபடும். விதிமீறல்கள் குறித்த புகார்களுக்கு பதிலளிக்க அந்நிறுவனத்தில் சட்ட நடவடிக்கைகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் சார்பில் இதுவரை 24 பேரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க அந்நிறுவனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பரிந்துரைகளுக்கு அந்நிறுவனம் சார்பில் எங்களிடம் சில விளக்கங்களும் கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி அனைத்து சமூக வலைதளங்களையும் தவறாக பயன்படுத்துவோரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in