திருப்பூர் அருகே சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழப்பு

திருப்பூர் அருகே சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழப்பு

Published on

திருப்பூர்: திருப்பூர் அருகே 15 வயது சிறுவன் கார் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஆதி நாராயணன். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி அருகே கந்தசாமி தோட்டத்தில் குடியேறினர். கோவில் வழி- தாராபுரம் சாலையில் ஆதிநாராயணன் உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது 3-வது மகள் தீபிகா (11), அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் தந்தை நடத்தி வரும் உணவகத்துக்கு செல்வதற்காக சாலையோரம் தீபிகா நடந்து சென்றார். அப்பகுதியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதியது. இதில் தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது, காரை ஓட்டியது 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தீபிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in