பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை: ஆண் நண்பரை தேடும் போலீஸ்

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை: ஆண் நண்பரை தேடும் போலீஸ்
Updated on
1 min read

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய் (28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சியை அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி, பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20), டி.கோட்டாம்பட்டியிலுள்ள ஆண் நண்பர் சுஜய் வீட்டுக்கு நேற்று வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சுப்புலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு சுஜய் தப்பியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பு லட்சுமி உயிரிழந்தார்.

அருகே வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில், மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், தலைமறைவாக உள்ள சுஜயை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in