சென்னை | டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் படுகொலை: அதிர்ச்சியில் கூச்சலிட்டவரும் கொல்லப்பட்டார்

சென்னை | டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் படுகொலை: அதிர்ச்சியில் கூச்சலிட்டவரும் கொல்லப்பட்டார்
Updated on
1 min read

சென்னை: திருவொற்றியூரில் டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டவரும் குத்தப்பட்டு இறந்தார்.

சென்னை திருவொற்றியூர், எம்ஜிஆர் சாலையில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு மது வாங்க எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் கோழி செல்வம் (32) என்பவர் நேற்று மதியம் வந்திருந்தார். அதேகடைக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவரும் வந்திருந்தார். இருவரும் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குத்திவிடுவதாக விளையாட்டு காட்டியுள்ளனர்.

அப்போது, கோழி செல்வம் மனோஜை உண்மையாகவே குத்தினார். இதைப் பார்த்து அருகிலிருந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அதிர்ச்சியில் கூச்சலிட்டார். இதனால், அவரையும் கோழி செல்வம் குத்தினார். கத்திக் குத்து விழுந்த இருவரும் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

காயமடைந்த இருவரையும் போலீஸார் மீட்டு ஸ்டான்லிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மனோஜ் மற்றும் முதியவர் இருவரும் இறந்தனர். இதையடுத்து, கத்தியால் குத்திய கோழி செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in