

சென்னை: சென்னை வில்லிவாக்கம், பாரதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (39). இவர் வியாசர்பாடி, மேற்கு அவென்யூ சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 30-ம் தேதி இரவு பணியிலிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பிரபாகரனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, இலவசமாக பெட்ரோல் போடச் சொன்னார். பிரபாகரன் மறுக்கவே, அந்த நபர் இவரை தாக்கிவிட்டு தப்பினார்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியதாக வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ருக்கேஸ்வரனை (21) போலீஸார் கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 4 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.