

திருப்பூர்: திருப்பூர் அருகே தொட்டிபாளையம் மசநல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (45). இவரது மகள் வைஷ்ணவி (13), அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வைஷ்ணவியை காணவில்லை. மகளை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது, அப்பகுதியிலுள்ள கிணற்றில் வைஷ்ணவி சடலமாக கிடந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர், அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீஸார் சென்று, மாணவியின் சடலத்தை மீட்டனர்.
விசாரணையில், அருகில் வசித்து வந்த குழந்தையுடன் வைஷ்ணவி விளையாடியுள்ளார். அப்போது குழந்தை கடித்ததால், வைஷ்ணவியை அவரது தாயார் திட்டியுள்ளார். விரக்தியடைந்த சிறுமி தற்கொலை செய்துள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.