

புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சாணரப்பேட்டை சுடுகாடு பகுதியில் ஆயுதங்க ளுடன் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக வடக்கு எஸ்பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கும்பல் போலீஸை கண்டதும் தப்பியோட முயன்றது. அவர்களில் 4 பேரை மடக்கிப் பிடித்தனர். அக்கும்பலை சோதனையிட்டதில், ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் 2 கத்திகளை கைப்பற்றினர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், சாணரப்பேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் என்ற புளியங்கொட்டை (28), சதீஷ்குமார் (30), விக்னேஷ் (23), பிரகாஷ் (19) என தெரியவந்தது.
ரவுடியான ரங்கராஜின் பிறந்தநாளையொட்டி அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார், விக்னேஷ், பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் சுடுகாடு பகுதியில் திரண்டு பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.
மேலும் அக்கும்பலைச் சேர்ந்த ரெட்டியார்பாளையம் ஷாருகான், பொறையூர் முகேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கைதான 4 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.