

திருச்சி: மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்டங்களில் கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக டிஜிபிசைலேந்திரபாபு உத்தரவின்பேரில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் மருத்துவத் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஏப்.1 முதல் ஏப்.8 வரையிலான நாட்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முறையாக மருத்துவப் படிப்புபடிக்காமல், போலி உரிமம் வைத்துக் கொண்டு சட்ட விரோதமாக சிகிச்சை அளித்து வந்ததாக புதுக்கோட்டையில் 4, பெரம்பலூரில் 3, அரியலூரில் 4, தஞ்சாவூரில் 5, திருவாரூரில் 10, நாகப்பட்டினத்தில் 3 என 28 போலிமருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.