புதுக்கோட்டை - கீரனூர் அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு: தனியார் வங்கி உதவி மேலாளர் கொலை

புதுக்கோட்டை - கீரனூர் அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு: தனியார் வங்கி உதவி மேலாளர் கொலை
Updated on
1 min read

புதுக்கோட்டை: கீரனூர் அருகே ஒடுகம்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தகராறு காரணமாக, வங்கி உதவி மேலாளர் கம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டியை அடுத்த ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சிநடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் சிலர் கூட்டமாக நடனம்ஆடியுள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, சிலர் கற்களை வீசித் தாக்கியதில் ஒடுகம்பட்டியைச் சேர்ந்த முகமது யாசின்(21) என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அன்று நள்ளிரவில் மருத்துவமனையில் இருந்த முகமது யாசினைப் பார்ப்பதற்காக, அவரது நண்பர்களான ஒடுகம்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(28), வீரமணி(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

சேமத்துப்பட்டி விலக்கில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் மறைந்திருந்த சிலர், அவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கினர். இதில், விக்னேஸ்வரனின் கழுத்தில் கம்பியால் குத்தியதில், அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகதெரிவித்தனர். இதையடுத்து, விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் சிலர், மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த கொலை சம்பவம் குறித்துஒ.பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த 6 பேர் மீது கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கே.ராமலிங்கம் (48) என்பவரை கைது செய்தனர்.

மேலும், ஒடுகம்பட்டியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, விக்னேஸ்வரனை கொலை செய்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கீரனூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

அப்போது, அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், அனைவரையும் கைது செய்யும் வரை விக்னேஸ்வரனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in