சென்னை | ரஷ்யா சென்ற மாணவர் 3 மாதத்தில் சென்னை திரும்பினார்: வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி மோசடி

சென்னை | ரஷ்யா சென்ற மாணவர் 3 மாதத்தில் சென்னை திரும்பினார்: வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி மோசடி
Updated on
1 min read

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைப்பதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தனியார் கல்வி ஆலோசனை மைய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்தவர் நசரத் அஸ்ரப். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் மூலம் ரஷ்யாவில் உள்ள ஆர்மீனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கக் கடந்த டிசம்பர் மாதம் அங்கு சென்றுள்ளார். கல்விக் கட்டணமாகச் சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் ரூ.10 லட்சத்தை முன்பணமாகப் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தில் கல்விக் கட்டணம் முழுவதையும் கட்டி விடுவதாக உறுதி அளித்துள்ளனர். அதன்படி முதல் தவணை கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்வி நிறுவனத்தினர் 2-வது தவணை கட்டணத்தை கட்ட சொல்லியுள்ளனர்.

ஆனால், அஸ்ரப் தரப்பில் யாரும் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் கல்விக்காகப் பணம் பெற்று கட்டாமல் அதைச் சுருட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே அஸ்ரப்பால் ரஷ்யாவில் கல்வியைத் தொடர முடியவில்லை.

போலீஸார் விசாரணை: இதையடுத்து அவர் சென்னை திரும்பி, சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவன நிர்வாகிகளிடம் சென்று கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் கொடுக்காமல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அஸ்ரப், இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் நடத்தி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஞ்சலா பெனடிக்ட்(36), சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பிரேம்நாத் (32) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in