விபத்தில் முதியவர் உயிரிழப்பு: செந்துறை - அரியலூர் சாலையில் மறியல்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சாலை விபத்தை கண்டித்து செந்துறை - அரியலூர் சாலையை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாலை விபத்தை கண்டித்து செந்துறை - அரியலூர் சாலையை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் அருகே டெம்போ வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரியலூர் அடுத்த ஆமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (60). கூலித் தொழிலாளியான இவர், இன்று (ஏப்.05) காலை வீட்டின் அருகே செந்துறை - அரியலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பின்னால் வந்த டெம்போ வாகனம் மோதியுள்ளது. இதில் முதியவர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், தகவலறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை, மாலை மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என உத்தரவு உள்ள நிலையில், கனரக வாகனங்கள் இயக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியலூர் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக செந்துறை - அரியலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in